Sunday, September 3, 2023

"அந்தந்த நாளுக்கு வாழுதல்"

"அந்தந்த நாளுக்கு வாழுதல்"

_“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்”_ (மத்தேயு 6:11).

அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் அந்தந்த நாளுக்குரிய கிருபைகளைப் பெற்று ஆண்டவருடைய பெலத்தைச் சார்ந்து வாழுகிற அருமையான வாழ்க்கையை நாம் விட்டுவிடுகிறோம். மேலும் “ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத்தேயு 6:34). ஆனால் மனிதன் அநேக விதங்களில் கவலைப்படுகிறவனாகவே இருக்கிறான்.

நாம் வாழுகிற இந்தக் குறுகிய கால வாழ்க்கையில் கவலையினாலேயே நம் வாழ்க்கையின் பெரும் பகுதி வீணாய்ப் போகிறது என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார் அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். பாடுகள் நம்முடைய வாழ்க்கையில் உண்டு. ஆனால் அதை தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து அவருடைய வழிநடத்துதலுக்காக ஜெபிப்போம்.

நாளைக்காக நாம் கவலைப் படுவதினால் நம் சரீர அளவோடு ஒரு முழத்தையாகிலும் கூட்ட முடியாது என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய தேவை என்ன என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் நம்முடைய தேவையைச் சந்திப்பார் என்பதையும் அறிந்திருக்கிறோம். அவரைச் சார்ந்துகொள்வது என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெளிப்படுத்தப்படும் என்றால் அது எவ்வளவு நன்றாய் இருக்கும்! அவ்விதமான வாழ்க்கையே கர்த்தருக்கு மகிமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

"காலை வணக்கம்"
"இந்த நாள் தங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக அமைவதாக"