Tuesday, July 12, 2022

"திடநம்பிக்கை"

🍒 "திடநம்பிக்கை" 🍒

"கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்" (நீதிமொழிகள் 14:26)

கர்த்தருக்கு பயப்படும் பயம் ஒருவருக்கு இருக்கும்போது, அவர் எதை குறித்தும் கவலைப்படாமல் ஆபத்தைக்கண்டு பயப்படாமல் அமைதியாக இருக்க முடியும். ஏனென்றால் கர்த்தர் எல்லா சூழ்நிலையிலும் தங்களை காத்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை இருப்பதால்!.

ஒரு மனிதனுக்கு கர்த்தருக்கு பயப்படும் பயம் இல்லாமல் போகுமானால் அவனுடைய பிள்ளைகளுக்கு ஒருவேளை அடைக்கலம் இல்லாமற் போகலாம். கர்த்தருக்கு பயப்படுவது நம்முடைய சந்ததிக்கே பயனளிக்குமென்றால் நாம் எததனையாய் கர்த்தருக்கு பயப்பட வேண்டும்? ஆனால் கர்த்தருக்கு பயப்படும் பயம் பெற்றோராகிய நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருக்குமென்றால் குடும்பங்களில் எத்தனை சந்தோஷம் இருக்கும்?.

நோவாவை கர்த்தர் பேழையை கட்டச் சொல்லி, அவர் அதை முடித்தப்பிறகு, கர்த்தருக்கு பயந்த நோவாவை மாத்திரம் அல்ல, அவருடைய மூன்று பிள்ளைகள், அவர்களது மனைவிமார்களையும் கர்த்தர் பேழைக்குள் வரச்செய்து காப்பாற்றினார். சோதோம் கொமாரா தேசங்களை கர்த்தர் அழிக்க நினைத்தபோது, கர்த்தருக்கு பயந்த லோத்துவையும், மனைவியயையும், அவருடைய பிள்ளைகளையும் தேசத்துக்கு வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார். லோத்துவின் மனைவி பின்னிட்டு பார்த்து உப்புத்தூணாய் மாறினாள்.

கர்த்தருக்கு பயப்படுபவனுக்கு திடநம்பிக்கை உண்டு. என் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று. அந்த திட நம்பிக்கை என் பிள்ளைகளையும் கர்த்தர் விடமாட்டார், அவர்களையும் காத்துக்கொள்வார். அவர்களையும் பொறுப்பெடுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கும்.

நாம் கர்த்தருக்கு பயப்படுகிறவர்களானால், ஒன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும், நாம் கர்த்தரோடு, பாவத்திற்கு விலகி ஜீவக்கும்போது, நம் பிள்ளைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார், அவர்களுக்கும் அடைக்கலம் கிடைக்கும். இது எத்தனை பெரிய ஆசீர்வாதம்! ஆபிரகாமின் சந்ததியை என்றென்றும் ஆசீர்வதித்து, இந்த நாள் வரை அவர்கள் நிமித்தம் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோமே! இதுதான் கர்த்தரை தேடுகிறவர்களுக்கும், பயப்படுகிறவர்களுக்கும் கிடைக்கும் பாக்கியம்! ஆமென் அல்லேலூயா!.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் எங்கள் பிள்ளைகளை குறித்து அதிக கவலைப்பட்டாலும், நாங்கள் உமக்கு பயப்படுகிறவர்களாயிருந்தால் எங்கள் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும் என்று உம்முடைய வார்த்தைகள் சொல்லுகிறபடியால், உமக்கு பயப்படும் பயத்தை எங்களுக்கு போதித்து வழிநடத்தும். எங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்தருளும். இயேசுகிறிஸ்துவின் ஜீவனுள்ள நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.