Thursday, July 21, 2022

தடுப்பூசி

🍒 "தடுப்பூசி" 🍒

“ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.” – சங்கீதம் 91:10 

ஜான் ஜீ லேக் என்கிற ஊழியக்காரர் ஒரு விதக் கொடிய வியாதி பரவிக்கொண்டிருந்த காலத்தில் மருத்துவமனைகளுக்கு சென்று வியாதியஸ்தருக்காக ஜெபித்து வந்தார். இதைக் கண்ட மருத்துவர்கள் அவரை அழைத்து, “நீங்கள் இந்த கொடிய வியாதியஸ்தர் தலையில் கைகளை வைத்து ஜெபிக்கின்றீர்கள்; அந்த வியாதிகள் உங்களை தொற்றாதா? நீங்கள் தடுப்பூசி போட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு இந்த ஊழியக்காரர் சொன்னார், “ஆம், நான் தடுப்பூசி போட்டிருக்கிறேன்” என்றார். மருத்துவர்கள் என்ன தடுப்பூசி எப்போது போட்டீர்கள்? என்று கேட்க அவர் சொன்னார், “நான் கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னை பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே (ரோமர் 8:2) என்ற தடுப்பூசி போட்டிருக்கிறேன்" என்றார். இந்த ஊழியக்காரர் போட்ட தடுப்பூசி என்ன? பாவம், மரணம் என்ற பிரமாணத்தினின்று விடுதலை என்கிற தடுப்பூசியே!

நாம் வேதத்தைப் பார்ப்போமானால், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது அநேக வாதைகள் வந்தன. ஆனால் எதுவுமே இஸ்ரவேல் ஜனங்களை ஒன்றும் சேதப்படுத்தவில்லை. ஏனென்றால் தேவனை அண்டிக்கொண்ட யாவருக்கும் அவரே அரணாக, கோட்டையாக, கேடகமாக, துருகமாக நிழலாக இருந்தார். இன்றைக்கும் அப்படியே இருக்கிறார். 

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! இன்று பல விசித்தரமான கொள்ளைநோய்கள் பரவினாலும் எதுவும் நம்மை மேற்கொள்ளாது. ஏனென்றால் நாம் போட்டிருக்கிற தடுப்பூசி அப்படிப்பட்டது. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் மாத்திரமே இந்த தடுப்பூசி வேலை செய்யும். கிறிஸ்துவுக்கு வெளியே இருப்பவர்களுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நீ இப்பொழுதே என்னிடம் வா என்று இயேசு அழைக்கிறார். உங்கள் அந்தரங்க பாவங்களை விட்டு மனந்திரும்பி வரும்படி தேவன் எதிர்பார்க்கிறார். அவருக்காக  உன்னை ஒப்புக்கொடுப்பாயானால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது. வாதை உன் கூடாரத்தை அணுகாது. ஆமென்!